ஆனைமலை: ஆனைமலை அருகே, ஜாதிக்காய் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து, வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்லுாரி மாணவர்கள், 40 பேர், ஆனைமலை பகுதியில் தங்கி கிராமப்புற ஆய்வுகள்மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கோட்டூர் பொள்ளாச்சி ஜாதிக்காய் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு ஜாதிக்காய் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கடந்த, இரண்டு நாட்களாக,கோட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக, 15 டன் ஜாதிக்காய் நேரடியாக விவசாயிகள் இடம் இருந்து சேகரிக்கப்பட்டு, தரம் பிரித்து விற்பனை செய்யப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.
இந்தாண்டு, 50 டன் ஜாதிக்காயை, பொள்ளாச்சி ஜாதிக்காய் நிறுவனம் விவசாயிகளுக்காக விற்பனை செய்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு ஜாதிக்காய் தரம் பிரித்தல்மற்றும் பதப்படுத்தி வைக்கும் தொழில் நுட்பம் பற்றி, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜாதிக்காயின் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்கள் பற்றி மாணவர்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் ஜாதிக்காய் தோட்டங்களுக்கு சென்று, மாணவர்கள் நேரடியாக அதன் மரம் பராமரிப்பு மற்றும் உர மேலாண்மை மற்றும் பூச்சி தாக்குதல் மேலாண்மை பற்றி, விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது என, உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரஞ்சித்குமார் தெரிவித்தார்.