பந்தலுார்: பந்தலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சுற்றி சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, மாணவர்கள் கூடு அமைத்துள்ளனர்.
பந்தலுார் அருகே, பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி நிர்வாகம், சீனிவாசா அறக்கட்டளை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் ஏகம் பவுண்டேஷன் இணைந்து, உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை வகித்தார்.
பிதர்காடு வனச்சரகர் ரவி முன்னிலை வகித்து பேசுகையில், இயற்கை வளங்களை பாதுகாத்தால் மட்டுமே, சிட்டுக்குருவிகள் மற்றும் பறவைகள், வனவிலங்குகளை பாதுகாக்க முடியும். வனமும், வனவிலங்குகளும் நலமாக இருந்தால் தான், மனித சமூக மும் சிறப்பாக வாழும். சிட்டுக்குருவிகளை பாதுகாத்திட, மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், மனிதர்களை சார்ந்து வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் தற்போது காணாமல் போய் வருகிறது. பழங்காலங்களில், தானிய வகைகளை விதைக்கும் போது அவற்றை உட்கொள்ள பறவைகள் அதிகம் வரும். தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் பறவைகள் அழிந்து வருகிறது.மாணவர்கள் தங்கள் வீடுகளில் சிறு கூடுகள் செய்து வைத்து, குருவிகளுக்கு தானிய வகை உணவுகள், தண்ணீர் போன்றவற்றை வைக்க முன்வரவேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிட்டு குருவிகள் குறித்து ஓவியம், பாடல், கவிதை வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியை சுற்றி சிட்டுக்குருவிகளுக்கு மாணவர் கூடு அமைத்தனர்.
ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.