கலபுரகி: பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில், தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., கடைசி தேர்வு நேற்று நடந்து முடிந்தது. கலபுரகி, அப்சல்புராவின், தேர்வு மையத்தில், தேர்வு முறைகேட்டை தடுக்கும் நோக்கில், போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ஏட்டு பண்டித் பான்ட்ரே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவி, காப்பி அடித்து, தேர்வு எழுதுவதை கவனித்த ஏட்டு, மாணவியை கண்டித்தார். இந்த விஷயத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். தேர்வு முடிந்த பின், வெளியே வந்த மாணவி, தன் அண்ணன் கைலாஷிடம் நடந்ததை கூறினார்.
கோபமடைந்த இவர், தன் நண்பர் சமீருடன் சேர்ந்து, ஏட்டு பண்டித் பான்ட்ரேவை திட்டியதுடன், கல்லால் தாக்கினார். தகவலறிந்து வந்த அப்சல்புரா போலீசார், கைலாஷையும், சமீரையும் கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த ஏட்டு சிகிச்சை பெறுகிறார்.