மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும், தற்போதைய கல்விமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கல்வி கற்க செல்லும் மாணவர்களின் மூளையில், எவ்வளவு முடியுமோ, அதற்கு மேலும் திணிக்க, கல்வி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இது நல்ல கல்விச்சாலையின் பணியல்ல. இதனால் மாணவர்களின் அறிவும், ஒழுக்கமும் துளி கூட வளர்வதில்லை. மாறாக, எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்படும் சூழ்நிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
சிறந்த ஒழுக்க நெறி படைத்தவர்களாக, பழக்க வழக்கங்களில் மேம்பட்டவர்களாக, நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களாக, தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டியதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தை போதித்தாலே, எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க என்ன தேவை, என்பதை அவர்களே உணர்ந்து கொள்வர்.
மாணவர்களை, புத்தகப் பொதியை சுமக்கும் கழுதைகளாகவும், ஆண்டு முழுவதும் மனப்பாடம் செய்ததை பொதுத் தேர்வில் வாந்தி எடுக்க வைத்து மதிப்பெண் அளிக்கும் நடை முறையும் மாற்ற வேண்டும்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள், பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும். சாலை விதிமுறைகள், இந்திய அடிப்படைச் சட்டங்கள், வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை கற்றுத் தரப்பட வேண்டும்.
ஆற்றல் மிக்க நுõறு இளைஞர்களை கொடுங்கள், வளம்மிக்க இந்தியாவை உருவாக்கி காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அத்தகைய இளைஞர்களை உருவாக்கும் முயற்சியில்தான், கல்வி நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.