தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
- தரண்குமார், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது இதற்கான வசதி பெருகி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து கூட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்கள் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை மற்ற இன்ஜினியரிங் பிரிவுகளிலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உள்ளபோது, நீங்கள் எப்படி பல்வேறு மதங்களை மதிக்கிறீர்கள்?
- கமலாதரன், மருதுபாண்டியன் நகர், சிவகங்கை
நமது மதங்கள் மிக அழகான தீவுகளைப் போன்றவை. மதம் என்பது ஆன்மிகமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும். எல்லோரிடமும் ஒருமைப்பாட்டை பார்க்க வேண்டும். மதம், ஜாதி மற்றும் மொழி வேறுபாட்டுக்கு ஆதரவாக செயல்படமாட்டேன் என்று எல்லா மாணவர்களும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் என்னவாகும்?
- கிரிதர்ராஜ், இ.பி.ஜி., மெட்ரிக். பள்ளி, மூன்றுமாவடி, மதுரை
சூரியன் இதற்கு முன்பு 460 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. இன்னும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிலுள்ள எரிபொருட்கள் தீராது. சூரியனின் கடைசி காலத்தில் அதிலுள்ள ஹீலியம் குறைந்து பிற தனிமங்களால் அது பெரிதாகத் துவங்கும், அவ்வாறு விரிவடையும் போது, அது பூமியையே விழுங்கிவிடும்.