தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.
உள்நாட்டிலேயே உருவான நீங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஏன்?
- சந்திரன், யாதவா கல்லூரி, மதுரை
உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் 0.8 சதவீத எண்ணெய் மற்றும் காஸ் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 2030ம் ஆண்டில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் எரிசக்தி தேவைப்படும். தற்போது ஒரு லட்சத்து 44 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி மட்டுமே கிடைக்கிறது. இந்த தேவையை நிறைவேற்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி (சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி) அணு சக்தி மற்றும் உயிரி எரிசக்தியிலிருந்துதான் பெற வேண்டும்.
அணுசக்தி உற்பத்தி தற்போது 3,900 மெகாவாட் ஆக உள்ளது. 2012ம் ஆண்டில் 9 புதிய அணு உலைகளின் உதவியால் 7,160 மெகாவாட்டாக உற்பத்தியை உயர்த்த வேண்டும். 2030ம் ஆண்டில் 50 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த தேவையான பணிகள் தற்போது அணுசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் உற்பத்தி சிக்கல் ஏற்படும் போது, தேவைப்படும் யுரேனியம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள யுரேனியம் இறக்குமதி அவசியம். 2030க்குப் பிறகு நமக்கு அந்த தேவை இருக்காது.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள் என்ன?
- ஹரிப்பிரியா, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை
நம்மிடம் 61 ஆயிரம் டன் யுரேனியம் மட்டுமே உள்ளது. இது 10 ஆயிரம் மெகாவாட் மின் சக்தி உற்பத்திக்கு மட்டுமே பயன்படும். எனவே நமது அணு உலைகளை 50-55 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளோம். எல்லாவகையில் உள்ள எரிசக்தியை பயன்படுத்தினாலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியா எரிசக்திக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் நாம் எரிசக்திக்கு பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தடை இல்லை. ஆகவே எரிசக்தி தேவையை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும்.
அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு நல்லதா... கெட்டதா?
- ரம்யா கேசவ குமார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர்
- செந்தில், நாகசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை
அமெரிக்காவும் இந்தியாவும் தனது தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதற்கே இந்த உடன்படிக்கை. அமெரிக்க விதிமுறைகளை மீறி அங்குள்ள நிறுவனங்கள் நடந்து கொள்ளாது.