மனித உரிமைகளுக்கான இந்தியக் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

மனித உரிமைகளுக்கான இந்தியக் கல்வி நிறுவனம்ஆகஸ்ட் 25,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

மனித உரிமைப் போராட்டம் என்பது, மனிதன் ஒரு சமூகமாக வாழத் தொடங்கி, அரசியல் அமைப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்தே ஏற்பட்டதாகும். ஏனெனில், ஒருவர் மற்றவரை சுரண்டுவதும், அடிமைப்படுத்துவதும், அழிப்பதும் அப்போதிருந்தே நிகழ ஆரம்பித்துவிட்டன. மனித சமூகத்தின் வளர்ச்சி நிலைகள் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்தபோது, மனிதஉரிமைப் போராட்டங்களும் புதிய வடிவங்களைப் பெறத் தொடங்கின. மனித உரிமை சிந்தனைகள், அதன் பரிணாம சிந்தனை வளர்ச்சியை பொறுத்து, முதல் தலைமுறை உரிமைகள், இரண்டாம் தலைமுறை உரிமைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை உரிமைகள் என்ற அளவில் வகைப்படுத்தப்படுகின்றன.

நெடுங்காலமாக, மனித உரிமை சிந்தனைகள் என்பவை, சர்வதேச வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ராஜதந்திரிகள் ஆகியோரின் மட்டங்களிலேயே இருந்தன. ஆனால் இன்றைய நிலையில், தேசிய வழக்கறிஞர்கள், போராட்டக்காரர்கள், சீர்திருத்தவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற மக்கள் தொகுதியினரிடமும் மனித உரிமை சிந்தனைகள் சென்றடைந்துள்ளது மற்றும் போராட்டக் களங்கள் விரிவடைந்துள்ளன.

மனித உரிமைக்கான கல்வி நிறுவனம்

மனித உரிமைகள் தொடர்பான படிப்புகள், பயிற்சிகள், ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் ஆலோசனைகள் போன்ற நோக்கங்களுக்காக, இந்தியாவில் ஒரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டி உருவானதுதான், மனித உரிமைகளுக்கான இந்திய கல்வி நிறுவனம்(IIHR - Indian Institute of Human Rights). இது, World Institution Building Programme(WIBP) என்பதன் ஒரு துணை அமைப்பாக நிறுவப்பட்டது. WIBP அமைப்பானது, மனித உரிமைகளுக்கான இந்திய கல்வி நிறுவனத்திற்கு, சுயாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது. பலவித பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மனித உரிமைகள் தொடர்பாக, இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட நிலையிலான படிப்புகளை வழங்குவதற்காகவே இந்த சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

மனிதஉரிமைகள் தொடர்பான படிப்பு

கடந்த 1999ம் ஆண்டு, மனிதஉரிமைகள் துறையில், தொலைநிலைக் கல்வி முறையிலான முதுநிலை டிப்ளமோ படிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

மனித உரிமைகள் தொடர்பான தொலைநிலை முறையிலான முதுநிலைப் படிப்பின் விபரங்கள்

நோக்கம்

சமூக உரிமைகள், சர்வதேச மனிதஉரிமை பிரச்சினைகள், அகதி உரிமைகள் மற்றும் சட்டங்கள், பேரிடர் மற்றும் துயர் துடைப்பு, இனவெறி மற்றும் பாரபட்சம், போதைக் கடத்தல் மற்றும் தடுப்பு, நீதித்துறை செயல்பாடு மற்றும் மனித உரிமைகளின் உலகளாவிய மற்றும் பிராந்திய அம்சங்கள்

ஆகிய பிரிவுகளில் தேவைப்படும் மனிதவளப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர, வேறுபல பரவலான நோக்கங்களுக்காகவும் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அவை,

* அடிப்படை மனித உரிமைகள் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காகப் போராடுதல்

* பொருளாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க ஒத்துழைப்பது.

* ஜனநாயக அமைப்புகளை ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிப்பது.

* மனித உரிமைகளை நசுக்கும் அரசு அமைப்புகளோடு ஒத்துழைக்காமல் இருப்பது.

* மனித உரிமைகளை நசுக்கும் அரசாங்கங்கள் மீது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை கொண்டு வந்து அவர்களை பணிய வைப்பது.

* காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து, காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நன்மைக்கு ஐ.நா. மன்றத்தின் மூலம் பாடுபடுவது.

* சர்வாதிகார நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவர, ஐ.நா. மன்றத்தின் மூலம் பாடுபடுவது.

* பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளை களைய சட்டத்தின் மூலம் பாடுபடுவது.

* மனித உரிமைகள் பற்றிய தத்துவம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று அம்சங்களை ஆராய்தல்

* ஆயுதம் ஏந்திய அரசியல் குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போராடுவது.

* ஆதிக்க சக்திகளால் கொடுமைக்குள்ளாக்கப்படும் பலகீன மக்களுக்கு ஆதரவாக போராடுவது.

* ஆண்-பெண் வேறுபாடுகளை களைய பாடுபடுவது.

* மனிதஉரிமைகளைப் பற்றி புத்தகங்கள், கலைக் களஞ்சியங்கள், புள்ளிவிபரக் குறிப்புகள், ஜர்னல்கள் மற்றும் அகராதிகளை வெளியிடுவது

உள்ளிட்ட இதுதொடர்பான ஏராளமான நோக்கங்களைக் கொண்டு இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த முதுநிலைப் படிப்பிற்கான சேர்க்கைத் துவங்குகிறது.

தகுதிகள்

கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் பார்மசி உள்பட ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் காலஅளவு

2 வருடங்கள்

கற்பித்தல் முறை

தொலைநிலைக் கல்வி

படிப்பு உபகரணங்கள்

மனித உரிமைகள் தொடர்பான பல்வகை விபரங்களைப் படிக்கும் பொருட்டு, 40 Volumes(புத்தகங்கள்) என்ற அளவில், உபகரணங்கள் 2 வருட காலகட்டத்தில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சேர்க்கைப் பெற்றவுடன், இந்த படிப்பு உபகரணங்கள் பதிவு தபாலில் மாணவர்களுக்கு அனுப்பப்படும். வேறு எந்த கூடுதல் கட்டணமும் இதன்பொருட்டு வசூலிக்கப்படுவதில்லை.

இந்திய மாணவர்களுக்கான தேர்வு மையங்கள்

அகமதாபாத், அலகாபாத், அவுரங்காபாத், புபனேஷ்வர், பெங்களூர், பாரமுல்லா, பெரேலி, போபால், மும்பை, கல்கத்தா, சண்டிகர், டெல்லி, டெஹ்ராடூன், குவஹாத்தி, ஐதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, ஜாம்ஷெட்பூர், கோட்டா, லக்னோ, சென்னை, முசாபர்பூர், நாக்பூர், கோவா, பாட்னா, போர்ட்ப்ளேர், புனே, ராய்ப்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், ஷிம்லா, திருவனந்தபுரம், உதய்ப்பூர், வாரணாசி மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில், ஒவ்வொரு வருடமும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

வெளிநாட்டு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள்

வெளிநாட்டு மாணவர்களின் நலன் கருதி, அவரவர் நாடுகளிலேயே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தூதரகங்கள், ஹை கமிஷன்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் இதர பொது இடங்களில் சம்பந்தப்பட்ட இடங்களின் நிர்வாகிகளுடைய அனுமதியுடன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பட்டம் பெறுதல்

2 வருடங்கள் கொண்ட இந்தப் படிப்பின் தேர்வுகளில்(Master thesis உட்பட) வெற்றிபெறுபவர்கள், மனித உரிமைத் துறையில் 2 வருட முதுநிலை டிப்ளமோ பட்டம் பெறும் தகுதியைப் பெறுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us