புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர் கல்விக்கு உதவும் வழகாட்டி நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர் கல்விக்கு உதவும் 3 நாள் வழகாட்டி நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு கோலாகலமாக துவங்கியது நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக டீன் கிங்ஸிலி ஜெப சிங் நேற்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கருத்தரங்கை துவக்கி வைத்து எஸ்.ஆர்.எம்., டீன் கிங்ஸிலி ஜெப சிங் பேசியதாவது: பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் பல நிலைகளைத் தாண்டி வந்திருந்தாலும், பிளஸ் 2 படிக்கும் பருவம் மிக முக்கியமானதாகும். பிளஸ் 2விற்குப் பிறகு என்ன படிப்பது என்பது முக்கியமானதாகும். இந்த நேரத்தில் என்ன படிக்கலாம், என்ன பாடப்பிரிவு தேர்வு செய்வது என்பதைப் பொறுத்துதான் எதிர்காலம் அமையும். மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது, எந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தால் எதிர்காலம் நன்றாக அமையும் என்பதைத் தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும். முன்பெல்லாம் தமிழகத்தில் குறைந்த அளவிலே பொறியியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது நுற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் நல்ல கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் மாணவர்களுக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டும். மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் எந்தப் பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களே அந்தப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். துறையைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் வேண்டும். பெற்றோர், மாணவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு கோர்சில் படிக்க வைக்கக்கூடாது. இதற்காகத்தான் தினமலர் நாளிதழ் இதுமாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறது. இதற்காக நான் தினமலர் நாளிதழை மனமார பாராட்டுகிறேன். இவ்வாறு டீன் பேசினார்.