துறை பற்றிய அறிவே...சாதனையாளர்களை உருவாக்கும்! | Kalvimalar - News

துறை பற்றிய அறிவே...சாதனையாளர்களை உருவாக்கும்!

எழுத்தின் அளவு :

ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படலாம். ஆனால் அதற்கு மேலாக ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்பதை பலரும் அறிவதில்லை. அதுதான் அந்த துறையைப் பற்றிய அறிவு. திறனறியும் தேர்வுகளின் போது இந்த அறிவு பரிசோதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட துறையில் ஆசை மட்டும் இருந்துவிட்டு, அத்துறையில் போதுமான அறிவு இல்லை என்றால் அத்துறையில் சாதிக்க முடியுமா?

இதற்காகத்தான் தற்போது .டி., நிறுவனங்கள் புதிதாக படித்து முடித்துள்ள மாணவர்களை வேலைக்கு சேர்க்க கல்லூரிகளில் இன்டர்வியூ நடத்தும் போது ஆப்டிடியூட் டெஸ்ட் எனும் திறனறிதல் தேர்வு நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட அளவில் செய்வதற்கான உள்ளார்ந்த அல்லது கற்றுத் தேர்ந்த ஒரு போட்டித்திறன் மிக்க விஷயம்தான் திறனறிதல். திறனறிதலுக்கும் திறமைக்கும் வித்தியாசம் உள்ளது. திறனறிவு என்பது பயிற்சி அளித்து பயன்படுத்தும் நிலையில் உள்ள ஆற்றலைக் குறிக்கும். திறமை என்பது தற்போதைய நிலையில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் காணப்படுவதாகும்.

ஒரு குழந்தை குறிப்பிட்ட வேலையை செய்வதிலிருந்து அக்குழந்தையின் திறனறிவை பரிசோதிக்கலாம். ஒரு குழந்தை படம் வரகிறது என்றால் அக்குழந்தை எம்.எப்.உசேன் ஆகும் என்றோ அல்லது பிகாசோ ஆகும் என்றோ கூறிவிட முடியாது. ஆனால் அந்த குழந்தைக்கு "கலை" பற்றிய திறனறிவு இருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பொருளை கற்பனை செய்து பார்க்கும் திறனறிவு அந்த குழந்தைக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இயந்திர பொருளை ஒரு குழந்தை கழற்றி சரியாக பொருத்துகிறது என்றால் அந்த குழந்தைக்கு இயந்திரங்களைப் பற்றிய திறனறிவு இருப்பதாக கருதலாம்.

திறனறிவு பரிசோதனை அனைத்தும் தனிநபரின் அறிவுத்திறனை பரிசோதிப்பதாகவே அமையும். உங்கள் மூளையில் இருப்பது மூடி மறைக்காமல் அந்த பரிசோதனையில் தெரிந்துவிடும். ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கான காரண காரியங்களை ஆராய்தல், பிரச்னைகளின் போது முடிவெடுத்தல் அறியப்படும். இது பொதுவாக புலனறிவு அல்லது .க்யூ., என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட அறிவு மட்டும்தான் இருக்கும் என்று நினைக்கக்கூடாது. மூளையின் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு திறனுடன் செயல்படும் தன்மையை உடையது. பகுத்தறிதல் மற்றும் சிந்தித்தறிதல் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்ததுதான் என்று ஹோவர்டு கார்ட்னர் கண்டறிந்துள்ளார். மொழியியல், பகுத்தறிவு, கலை அறிவு, உடல் அறிவு, இசை அறிவு, பொது தொடர்பு, சொந்த தொடர்பு, இயல்பான அறிவு ஆகியவற்றை மூளையால் திறம்பட செய்ய முடியும்.

இசையறியும் மூளைப்பகுதியை பயன்படுத்திக் கொண்டே வருகிறவர், தொடர்ந்து இசையறிவை வளர்த்துக் கொள்கிறார். அவருக்கு இயல்பாகவே இசைபற்றிய விஷயங்கள் அத்துபடியாகின்றன. ஒரு துறையைப் பற்றிய அறிவு அவர் அந்த துறையில் அவர் பெற்ற திறனறிவை காட்டுகிறது. ஆகவே ஒவ்வொருவரும் தங்களுடைய திறனறிவு எங்கு இருக்கிறதோ அத்துறையில் அவர் வேலை பார்க்க முடிவு செய்வது நல்லது.

பொதுவாக மொழியியலில் திறனறிவு உடையவர்கள் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இயற்கையிலேயே அவருக்கு மொழி அத்துபடி என்பதால் அவரால் நன்கு பேசவும் எழுதவும் முடியும். ஆசிரியர், பத்திரிகை, எழுத்தாளர், மேடைபேச்சு, தொழில்நுட்ப எழுத்தாளர்கள், ரேடியோ ஜாக்கி உள்ளிட்ட துறையினருக்கு நல்ல மொழி அறிவு இருக்க வேண்டும் என்பதால் இத்துறையில் அவர்கள் கால் பதிக்கலாம்.

இதுவரை நடத்தப்பட்ட சர்வேக்களில், குறிப்பிட்ட துறையில் திறன்மிக்கவர்கள் அத்துறையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளவர்கள் அது தொடர்பான துறைகளில் வாய்ப்புக் கிடைத்த போதும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, ஆர்.கே.நாராயணன் உள்ளிட்டோர் எழுத்துத்துறையில் சிறந்து விளங்கியதற்கு அவர்களின் மொழி அறிவுதான் காரணம். கருத்துகளை புரிந்து கொண்டு, பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க வல்லவர்கள் கணித சிக்கல்களையும் விடுவிப்பார்கள். தொழில்நுட்பம் அறிவியல் துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். அவ்வாறு சிறந்து விளங்கியவர்களில் சர்.சி.வி.ராமன், ராமானுஜம், ஹோமிபாபா, அப்துல்கலாம் உள்ளிட்டோர் அடங்குவர்.

ஜி.டி.நாயுடு போன்றவர்கள் இயந்திரவியலில் திறனறிவு கொண்டவர்கள். எம்.எப்.உசேன், ரவிவர்மா, கமல்ஹாசன், மணிரத்னம் போன்றவர்கள் கலையுலக அறிவு கொண்டவர்கள். சச்சின், தோனி, பி.டி.உஷா, பிரபு தேவா போன்றோர் உடல் திறன் கொண்டவர்கள். சுசிலா, லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பாலசுப்மணியன் ஆகியோர் இசை ஞானம் கொண்டவர்கள்.

பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டவர்கள் பொதுமக்களை நன்கு அணுகி அவர்களிடம் நல்ல தொடர்பை உருவாக்குவார்கள். இதுபோன்ற திறன் கொண்டவர்கள், நல்ல வாடிக்கையாளர் பலத்தைக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குவார்கள்.தன்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிவார்கள். எதை செய்ய முடியும். எதை செய்ய முடியாது என்பதையும் நன்கு அறிந்திருப்பார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற சேவை எண்ணத்தில் உள்ளவர்கள் இவர்கள். இயற்கையின் பால் ஈடுபட்டு அதன் மீது தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வார்கள். டாக்டர் சலீம் அலி, மேனகா காந்தி, குரோகடைல்மேன் போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடாது. பகுத்தறிவுத் திறன் மற்றும் வார்த்தைகளில் அதிக பரிச்சயம் உள்ளவர்களால் தேர்வுகளை நன்கு எழுத முடியும். ஆனால் அவர்களது மற்ற மூளைப்பகுதியில் பிற திறன்கள் தேங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. சச்சின் டெண்டுல்கர் அக்கவுண்டன்டாகவோ மணிரத்னத்தை விஞ்ஞானியாகவோ ஆக்க முயற்சித்திருந்தால் எப்படியிருந்திருக்கும். அதுபோல்தான் பெரும்பாலான பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள்.

மனம் நலன் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமை பொதிந்திருக்கிறது. இவையெல்லாம் வெளியில் தெரியாது. கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும். வீட்டு சூழ்நிலையும் பள்ளிச் சூழ்நிலையும் திறமையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். வெளிக்கொண்டு வந்த திறனை பட்டை தீட்டி திறனுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

சைக்கோமெட்ரிக் பரிசோதனை மூலம் ஒவ்வொரு தனிநபரின் திறனை அறியலாம். மாணவர்களுக்குள் பொதிந்துள்ள ஒவ்வொரு தனிப்பட்ட திறமையையும் அளவிட முடியும். பரிசோதனையின் போது இடம்பெறும் கேள்விகளுக்கு மாணவர் அளிக்கும் பதிலிலிருந்து இந்த அளவீடு கணக்கிட்டுக்கொள்ளப்படுகிறது. இது அறிவியல் பூர்வமான முறை. இதை பரிசோதிப்பதற்கு என்று தனியான திறமை வாய்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட வேலைக்கு இவ்வளவு திறன் இருக்க வேண்டும். அதை சைக்கோமெட்ரிக் பரிசோதனை நடத்தும் நிபுணர் கண்டறிகிறார். வக்கீல் திறன் அவசியம். கோர்ட்டுக்கு அளிக்கும் வழக்கு தகவல்களில் நல்ல மொழித்திறன் இருக்க வேண்டும். பல்வேறு கோணத்தில் சிந்திக்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட திறன் தேவைப்படுகிறது. எனவே ஒருவருக்கு என்ன திறன் இருக்கிறது. அதற்கேற்ப அவர் தேர்ந்தெடுக்கும் துறை எது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

கலாவதி, போதி, சென்னை

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துறை தேர்வு பற்றியும் மாணவர்களின் திறனறிவு தேர்வு மூலமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார் கலாவதி.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us