ஆராய்ச்சிக்கு அடித்தளம் பள்ளிகள்! | Kalvimalar - News

ஆராய்ச்சிக்கு அடித்தளம் பள்ளிகள்!ஜூன் 08,2022,17:53 IST

எழுத்தின் அளவு :

இன்றைய உலகில் மாணவர்கள் திறன் சார்ந்த பயிற்சிகளை பெறுவது மிக அவசியம். அதனோடு, தர்க்க ரீதியான சிந்தனைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 



பன்மொழியில் தயக்கமின்றி சரளமாகப் பேசக்கூடிய திறன்களை வளர்த்துக் கொள்வதால் பரந்துபட்ட வாய்ப்பினை பெறலாம். தினசாி நாளிதழ்களில் வரும் செய்திகளை வாசிப்பதும் மொழி வளத்தை மேம்படுத்த உதவும். பல்வேறு குழுக்களுடன் இணைந்து மாணவர்கள் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது முக்கியம். 



திட்டமிட்ட கடின உழைப்பு, ஒழுக்கம் சார்ந்த நற்பண்பு, தொடர் முயற்சி, தன்னம்பிக்கை, தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் எதிர்நீச்சல் போடுகிற மன உறுதி, அனைவரையும் மதிக்கும் நற்குணம் போன்றவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை.



கல்லூரிகளின் கடமை



கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறனை அறிந்து அதற்கேற்ப பாடத்திட்டத்தையும், சான்றிதழ் படிப்பிற்கான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். தொழில்நுட்பத்தில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், உயர்கல்வியில் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிாிவுகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுடைய ஆர்வத்திற்கு ஏற்றவாறு ஊக்கமளித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்துவதற்கான பயன்பாட்டு களத்தை உருவாக்க வேண்டும்.



தலைமைப்பண்பு, நெறிமுறைகள் சார்ந்த தொழில் முறை, தொடர் கற்றல், பிராந்திய மொழி சார்ந்த கல்வி, குழு மனப்பான்மை போன்ற நெறிகளில் மாணவர்களின் திறனைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதனால் நிறுவனங்கள் விரும்பும் துறைகளில் மாணவர்கள் எளிதாக வெற்றி பெற முடியும். இதற்கான களப்பணியை கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும். ஆசிாியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, அதன் பயிற்சி பெற்ற சிறப்பு நிபுணர்களால் வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் பாடத்திட்டத்தினை வடிவமைப்பதும் முக்கியம்.



ஆராய்ச்சி அவசியம்



சர்வதேச தரத்துடன் ஒப்பிடுகையில் அறிவு சார்ந்த கற்றல் இந்தியாவில் மேலோங்கி உள்ளது. ஆனால் பயன்பாட்டு கல்விமுறையில் நமக்கு இன்னமும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆராய்ச்சி சார்ந்த செயல்முறைகள் மேலை நாடுகளில் அதிகம் உள்ளது. அதற்கான நிதி உதவியும் அதிகமாக அங்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் தான் மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வியை தேர்ந்தெடுக்கிறார்கள். 



மேல்நிலைப் பள்ளியில் இருந்தே ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிாியர்களின் மேம்பாடு, பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. தொழில் நிறுவனங்களுடனான பங்கேற்பும், அரசின் பங்கேற்பும் ஒன்றிணைந்து செயல்படும் போது இந்தியாவின் கல்வித்தரம் அனைத்து விதத்திலும் மேலோங்கும். 



-எஸ். மலர்விழி, தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us