இன்றைய 'திறன் பொருளாதார’ காலக்கட்டத்தில், கல்லூரி படிப்பு மட்டும் போதாது. வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைக்க, படிக்கும்போதே துறை சார்ந்த திறன் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பட்டம் பெற்ற இளைஞர்களும் சிறப்பு திறன் வளர்ப்பு பயிற்சி பெறுவதன் வாயிலாக வாய்ப்புகளை பிரகாசமாக்கி கொள்ளமுடியும். ஏற்கனவே, வேலைக்கு சென்றுகொண்டிருப்பவர்களும் தங்களது தகுதிகளை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம். வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக சாதனை படைக்கவும் திறன்கள் மிக அவசியம். அத்தகைய திறன் வளர்ப்பு பயிற்சிகள் இன்று ஏராளமாக வழங்கப்படுகின்றன.
இளைஞர்களை சர்வதேச திறன் படைத்தவர்களாக உயர்த்துவதன மூலம் உலகத்தரமான வாய்ப்புகளை எளிமையாக்க முடியும். அத்தகைய முயற்சியாக திறன் வளர்ப்பிற்கு என்று தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப வளர்ச்சி
முன்பு, மெக்கானிக்கல் மற்றும் அட்டோமோட்டிவ் இன்ஜினியர்கள் தான் 'டிசைன்’ சாப்ட்வேரை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். உற்பத்தி துறையை எடுத்துக்கொண்டால் அதிகமான உற்பத்தி நிகழும் பிரிவாக ஆட்டோமோட்டிவ் விளங்குவதோடு, அவை சார்ந்த ஏராளமான நிறுவனங்களும் இன்றைய காலத்தில் அதிகரித்துள்ளன. அவை அனைத்திலும் டிசைனிங் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
உற்பத்தி துறை மட்டுமின்றி மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் இன்று 'டிசைன்’ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, டிசைன் சார்ந்த பயிற்சி, தொழில்நுட்ப திறன் மற்றும் வெளிநாட்டு மொழி ஆகியவற்றை கற்றுக்கொண்டால் சர்வதேச வாய்ப்புகளை எளிதாக பெற முடியும். சரியான வேலை கிடைக்காத மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் டிசைன் பயிற்சியை பெற்றால் அவர்களுக்கு நல்ல வேலை நிச்சயம் கிடைக்கும்.
கட்டுமான துறையை எடுத்துக்கொண்டால், முன்பு '2டி’ டிராயிங் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது ’3டி’ யாக மாறியது. ஆனால், இன்று முற்றிலும் மாற்றம் அடைந்து, 'பிம்’ எனும் ’பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, குறைந்த செலவில், எளிதான பராமரிப்பில், இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பான முறையிலான கட்டடங்களை எளிமையான முறையில் வடிவமைக்க முடியும். ’3டி’ பிரின்டிங் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறான தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப பயிற்சி முறைகளும் மாற்றம் கண்டுவருகின்றன.
அதிகரிக்கும் ஊதியம்
இன்ஜினியர்களின் ஊதியம் ஆரம்பகால கட்டத்தில் குறைவாக இருந்தாலும், 5 முதல் 10 ஆண்டுகால அனுபவத்திற்கு பிறகு பல மடங்கு அதிகமான ஊதியத்தை பெற முடியும். அதற்கான தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இன்ஜினியரும் குறிப்பிட்ட அனுபவத்திற்கு பிறகு ஒரு காலக்கட்டத்தில் 'புராஜெக்ட்’ மேனேஜராக வலம் வருவார்கள். அந்த இலக்கை அடைந்துவிட்டால் அவர்களால் அதிகமான ஊதியத்தை பெற முடியும். தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் வாய்ப்பும் அவர்களுக்கே அதிகம்.
-எஸ்.கே. செல்வன், நிர்வாக இயக்குனர், கேட் சென்டர்