விருப்பமுள்ள படிப்பை தேர்வு செய்யுங்கள்! | Kalvimalar - News

விருப்பமுள்ள படிப்பை தேர்வு செய்யுங்கள்!ஜூலை 03,2023,12:56 IST

எழுத்தின் அளவு :

உயர்கல்வியை தேர்வு செய்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்குகின்றனர். உறவினர்கள், நண்பர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், கல்வி ஆலோசகர்கள் ஆகியோர் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு விதமான ஆலோசனைகள் வந்துகொண்டு தான் இருக்கும். 



அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக மட்டுமே ஒரு படிப்பை தேர்வு செய்யக்கூடாது. குறிப்பாக, விருப்பமே இல்லாத ஒரு படிப்பை தேர்வு செய்வது வரவேற்கத்தக்கது அல்ல. பல்வேறு தரப்பினரும் தரும் ஆலோசனைகளை பரிசீலனையில் எடுத்துக்கொள்ளலாம். எந்த ஆய்வும் இன்றி அத்தகைய ஆலோசனைகள் அப்படியே முடிவாக மாறிவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பில் ஒவ்வொரு மாணவரும் அவரவருக்கு முதலில் விருப்பம் உள்ளதா என்பதை தெளிவு படுத்திக்கொண்டு தேர்வு செய்வதே சிறந்தது என்பது எனது கருத்து. அடுத்ததாக, மாணவரது நலனில் அக்கறை மிகுந்த, அனுபமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அவர்களது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.



இதர பிரிவுகள்



கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. வேலைவாய்ப்பு, அதிக வருமானம் ஆகியவை அதற்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. அதில் உண்மையும் உள்ளது. அதேநேரம் ஏனெனில், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல் வாகனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியால் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறை படிப்புகளும் முக்கியத்துவம் பெறுவதை பார்க்க முடிகிறது. 



கம்ப்யூட்டர், சாப்ட்வேர் பயன்பாடு இன்று அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. ஆனாலும், கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதல்ல; அவை மட்டுமே எதிர்காலமும் அல்ல. ஏற்கனவே உள்ள துறைகளில் இருந்து புதிய துறைகள் உதயமாகி வரும் நிலையில், கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் இதர துறைகளும் வளர்ச்சி அடைந்துவருகின்றன என்பதே நிதர்சனம்.



பெருமை



சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களை தரத்தை பரிசோதித்து பல்வேறு தரவரிசை வெளியிடப்படுகின்றன. அவை பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, அரசு அமைப்புகள் வெளியிடும் என்.ஐ.ஆர்.எப்., ரேங்கிங் முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பிற எந்த மாநிலத்தை விடவும் கல்வியில் தமிழகம் சிறந்தவிளங்குவதை இதன்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. 



எங்கள் கல்வி நிறுவனமும் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது பெருமைக்குரிய அம்சம். அதற்கு ஆய்வுகள், கல்வி செயல்திறன் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதும் ஒரு முக்கிய காரணம். அதிக ஆராய்ச்சிகள் நிகழும்போதுதான், தொடர் கற்றலுக்கான சூழலும் மேம்படும். பொறியியல் மட்டுமின்றி மருத்துவம், உளவியல், அக்கவுண்ட்ஸ், மனிதவளம் போன்ற துறைகளும் இன்று வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அத்துறை சார்ந்த வாய்ப்புகளும் பெருகி உள்ளன. அவற்றிற்குரிய திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.



படிப்பு மற்றும் வாய்ப்புகள் இரண்டும் மிக முக்கியம். இவை இரண்டும் வழங்கும் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேடி செல்ல வேண்டும். ஓய்வு நேரங்களை தொழில் நிறுவனங்களில் சிறு சிறு பயிற்சிகளை பெறுவதில் செலவிடுங்கள். வாழ்க்கை வளமாகும்.



-அபய் சங்கர், துணை தலைவர், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us