"தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து, நேரத்துக்கு படித்தால், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்," என, பொது இயந்திரவியலில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர் கவுதம் தெரிவித்தார்.
பிளஸ் 2 வில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கவுதம், பொது இயந்திரவியலில் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தை செல்வராஜ், லாரி டிரைவர்; தாய் சாந்தி.
மாணவர் கவுதம் கூறுகையில், "ஆசிரியர் கூறும் வழிமுறைகளை சரியாக பின்பற்றி வந்தேன். பொது இயந்திரவியல் என்பதால், ஓய்வு நேரம் கிடைக்கும் போது படங்களை வரைந்து பார்ப்பேன். கணக்கை திரும்ப திரும்ப போட்டு பார்ப்பேன். ஆங்கில வினாவை எழுதிப்பார்ப்பேன்.
மொத்ததில் "டிவி" பார்ப்பதை குறைத்து, நேரத்துக்கு படித்தால், தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறலாம். பள்ளியில் முதல் மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை பிடிப்பேன் என, எதிர்பார்த்தேன். மாநில அளவில் இரண்டாமிடம் வந்தது மிகவும் பெருமையாக உள்ளது. இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், அறிவுரையும் காரணமாகும்," என்றார்.