மாநில அளவில் 497 மார்க் பெற்று, திருச்சி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்., பள்ளி மாணவி ஈஸ்வரி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100. பெற்றார். இவரது தந்தை சுப்பிரமணியன், லாரி டிரைவர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ஈஸ்வரி ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தாய், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த ஈஸ்வரிக்கு ஒரு தங்கை உள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இவர்கள் கடந்த இரண்டு ஆண்டாக திருச்சி உறையூரில் வசித்து வருகின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு முதல் திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பயின்று வருகிறார். சாதனை படைத்தது குறித்து மாணவி ஈஸ்வரி கூறியதாவது:
"மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொண்டு படித்தேன். கடின உழைப்பு என்னிடம் இருந்ததால், மாநில அளவில் மார்க் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்வு சமயத்திலும் "டிவி" பார்த்தேன். எனது தந்தை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
டியூஷன் செல்லவில்லை. ஐ.ஏ.எஸ்., பயின்று, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது லட்சியம். எனது தந்தையின் ஆசையும் அது தான். ஐ.ஏ.எஸ்., வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சி.ஏ.,படித்து ஆடிட்டராவேன்." இவ்வாறு அவர் கூறினார்.