புதுச்சேரி: புதுச்சேரியில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் உள்ளிட்ட மூவரிடம் ரூ. 24.7 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, காமராஜர் நகர், சித்தன்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்கு சந்தையில் பகுதி நேர வேலையில்அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில், ரூ. 12.5 லட்சம் முதலீடு செய்து ஏமார்ந்தார்.
அரியாங்குப்பம், காக்கையன்தோப்பு சீனிவாசன் மனைவி பிரியா.ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த லிங்கை ஒப்பன் வாட்ஸ் ஆப் குழுவில் சேர்ந்தார். அதில், தினசரி ரூ. 2,000 சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 2.89 லட்சம் செலுத்தி ஏமார்ந்தார்.
முத்தியால்பேட்டை செந்தாமரை நகர், நேரு வீதியைச் சேர்ந்தவர் நிசாமுதீன். புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பேராசிரியர். கடந்த 7ம் தேதி இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சல் திரும்பி உள்ளதாகவும், அதில் போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட், பென்டிரைவ் இருப்பதாகவும், அவை பறிமுதல் செய்து சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடத்தில் ஸ்கைப் வீடியோ காலில் தோன்றி பேசிய நபர், மும்பை போலீஸ் என கூறி நிசாமுதின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு பெற்றார். போதை பொருள் கடத்தலுக்கு அபராதமாக பணம் செலுத்த வேண்டும். தவறினால் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினர்.இதனால் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 9.35 லட்சம் பணத்தை நிஜாமுதீன் செலுத்தி ஏமார்ந்தார்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.