இன்றைய நிலையற்ற உலகில், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் திறன் பெற்ற இளம் சமுதாயத்தை உருவாக்க, இன்னோவேஷன், இன்டர்நேஷனல், இன்டர்டிசிப்பிலினரி ஆகிய மூன்று அம்சங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பிரதானமாக பெற்றிருக்க வேண்டும்.
புத்தாக்க பாடத்திட்டம், சர்வதேச பேராசிரியர்கள், சிறந்த செயல்பாடுகள் மற்றும் அவசியமான பல்துறை வாய்ப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்கினால் மட்டுமே, வருங்கால சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலான ஆற்றலை மாணவர்களால் பெற முடியும்.
புதிய கல்விக் கொள்கை
அனைவராலும் எளிதில் பின்பற்றக்கூடிய, ஒவ்வொருவரது தனித்துவத்திற்கு ஏற்ப மாற்றத்தை புகுத்தக்கூடிய வகையில், தேசிய கல்விக் கொள்கை -2020 கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான முயற்சியின் அடிப்படையில், எதிர்மறை தாக்கம் எதுவும் இல்லாமல், நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளது. கல்வி என்பது புதுமை; அத்தகைய புதுமையை என்றும் புகுத்தும் வகையில் புதிய யோசனை, புதிய திட்டம், புதிய செயல்முறையுடன் மிகவும் எளிதான முறையில் வகுக்கப்பட்டுள்ள உன்னத ஆவணம்.
சர்வதேச அளவில் திறன்கள் முக்கிய இடம்பெற்றுள்ள இன்றைய காலக்கட்டத்தில், தகுதியான மனித வளத்தை உருவாக்கும் இந்திய உயர்கல்வி உலக அரங்கில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி நிறுவனங்களின் தனித்துவத்திற்கு ஏற்ப, புதிய ஐடியாக்களை புகுத்த தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.
நேர்மறை சிந்தனை
தொழில்துறை என்பது தரம், புத்தாக்கம் நிறைந்தவை. உரிய தகுதிகளை பெறும் மாணவர்களுக்கே அங்கே முக்கியத்துவம் கிடைக்கும். இந்த சூழலில், கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் இன்றைய மாணவர்களுக்கு, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழில்துறை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை மற்றும் தெளிவின்மை நிறைந்த இன்றைய உலகில், பல நேரங்களில் பயமுறுத்தும் வகையிலான சூழல் நிலவலாம்; அச்சுறுத்தும் சில நிகழ்வுகள் அரங்கேறலாம். ஆனால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் மிக மிக அவசியம். அத்தகைய திறன் தேவைப்படுபவையாகவே, 21ம் நூற்றாண்டு விளங்குகிறது.
ஆகவே, எப்போதும் நேர்மறையான எண்ணத்தையும், செயல்பாடுகளையும் கைவிடாத ’உறுதி’ இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகிறது. அவற்றோடு, இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மதிப்பிற்கும் உரிய பங்களிப்பையும் இளைஞர்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.
-ருதேஷ் தேஷ்பாண்டே, துணைவேந்தர், அஜென்கியா டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம், புனே
hd@adypu.edu.in