மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தற்போது தனித் துறையாக வளர்ந்து விட்டது. வாகன அமைப்பு உருவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் ஆய்வு நிறுவனங்களிலும் பணிகளில் சேரலாம்.
டாடா நிறுவனம் அதிரடியாக ஒரு லட்ச ருபாய்க்கு மலிவு விலைக் காரை களத்தில் இறக்கியிருக்கும் காலம் இது. மாருதி, டி.வி.எஸ். மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, போர்டு இந்தியா, எய்ச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார்ஸ் என்று பல்வேறு ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோமொபைல் துறையில் களம் இறங்கி வருகின்றன. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இத்துறையில் படித்த பொறியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.