பேஷன் என்பது நாள்தோறும் மாறிக் கொண்டே இருப்பது. தற்போது பத்திரிகைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் பேஷன் ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டனர்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பேஷன் துறையை மேலும் கவர்ச்சி மிக்கதாக மாற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் பேஷன் துறையால் ஈர்க்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த இருபதாண்டுகளில் இந்த துறையில் இளைஞர்களின் வரவு அதிகரித்துள்ளது.
பேஷன் வடிவமைப்பு என்பது பல துறை சார்ந்த பணிகளுடன் தொடர் புடையது. டிசைனிங், வடிவ உற்பத்தி நிர்வாகம், தரக் கட்டுப்பாடு, திட்டமிடல், டெக்ஸ்டைல் அறிவியல், ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், உலகளாவிய வர்த்தக பயிற்சி, கலர் மிக்ஸிங், பேஷன் கொள்கை, சர்வதேச பேஷன் மார்கெட்டிங் உள்ளிட்ட விஷயங்களில் தேர்ந்த பயிற்சி இருந்தால் பேஷன் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
இதனால் பேஷன் துறை சார்ந்த கல்வி தற்போது மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்த துறையில் கிடைக்கும் பணமும், புகழும் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கிறது. பேஷன் ஷோக்களும், பேஷன் நிகழ்ச்சிகளும் இளைஞர்களின் ஆர்வத்தை தொடர்ந்து தூண்டுகின்றன. இதனால் பல கல்வி நிறுவனங்கள், பேஷன் தொழில் நுட்பக்கல்லூரிகளை நிறுவி வருகின்றன.
குறிப்பாக அரசுத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பேஷன் தொழில் நுட்பக்கல்வி நிறுவனங்கள் டில்லி, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ளன. இவை தவிர, மும்பையில் உள்ள ஜே.டி., பேஷன் தொழில் நுட்பக் கல்வி நிறுவனமும் இந்த துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது.