தீ விபத்துக்கள் ஏற்படுவதையும், அவற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகளைப் பற்றியும் படிப்பது பயர் இன்ஜினியரிங் படிப்புகள். உயிர்ப் பாதுகாப்பு உள்ள கட்டடங்களையும் வசதிகளையும் உருவாக்கி தீ விபத்துக்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் அறிவியலின் ஒரு பிரிவே பயர் இன்ஜினியரிங் என வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு தீ விபத்துக்களிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் பொறியியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
தீ விபத்து எதனால் ஏற்படுகிறது, தீ விபத்து ஏற்பட்டவுடன் மக்களின் செயல் எப்படியிருக்கும், தீ விபத்தினால் சொத்துக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பன பற்றியும் தீ விபத்தை கண்டு பிடிக்கும் மற்றும் அறிவிக்கும் அலாரம், தீ விபத்தின் சேதத்தைக் குறைக்கும் ஸ்பிரிங்க்ளர் போன்ற சாதனங்களைப் பொருத்துவது பற்றியும் படிக்க வேண்டும்.
பல்வேறு உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றும் படிப்பு என்பதால் பயர் இன்ஜினியரிங் படிப்புகள் இன்று உலகெங்கும்இன்று புனிதமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் கருதப்படுகின்றன. இத்துறை அபாயகரமான பணித் தன்மையைக் கொண்டுள்ளது. பொதுநலச் சேவை புரியும் மனப்பான்மையானது கட்டாயத் தேவையாக இருக்கிறது. இந்தியாவில் நாக்பூரில் உள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரியானது மூன்றறை ஆண்டுகளில் முடிக்கக் கூடிய பயர் இன்ஜினியரிங் படிப்புகளைத் தருகிறது.
தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், தீ விபத்திலிருந்து தப்பிக்கும் முறைகளைக் கையாளுவதும் தீ விபத்துக்களின் சேதத்தை முடிந்த அளவு குறைப்பதும் பயர் இன்ஜினியர்களின் தலையாயப் பணியாகும். ஒரு தீ விபத்தின் காரணத்தை கண்டுபிடிப்பது மற்றும் மாற்று வழிகளில் அத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதையும் அவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். தீ விபத்துக்களின் போது பயன்படுத்தப்படும் சாதனங்களை மறுவடிவமைப்பது, புதிய சாதனங்களை உருவாக்குவது போன்ற பணிகளையும் இவர்களே செய்கிறார்கள்.
பயர் இன்ஜினியரிங் யார் படிக்கலாம்?: நல்ல தகவல் தொடர்புத் திறன், நிர்வகிக்கும் திறன், பிரச்னைகளின் மையத்தில் முடிவெடுக்கும் திறன், விரைவாக முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன் போன்றவையே இப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கிறது. இவை தவிர நல்ல உடற்கட்டு, சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் திறமை, அமைதியான மனோபாவம், சுய ஒழுக்கம், பொறுப்புணர்ச்சி மற்றும் தலையாயப் பண்புகள் கூடுதல் தகுதிகளாக அமையும்.
என்ன படிப்புகள் உள்ளன?: மூன்றரை ஆண்டுகளில் படிக்கக் கூடிய பி.இ. பயர் இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன. சப் ஆபிசர் பிரிவு படிப்புகள், சேப்டி அண்ட் பயர் இன்ஜினியரிங் பி.டெக். படிப்புகள், 3 ஆண்டு பி.எஸ்சி. பயர் இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் பயர்மேன் பயிற்சிப் படிப்புகள் இத்துறையில் உள்ளன. இது தவிர மாநில அரசுகள் மாநில தீயணைக்கும் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகளைத் தருகின்றன. இவை தவிர, சில தனியார் கல்வி நிறுவனங்களும் பயர் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளைத் தருகின்றன.
கல்வி நிறுவனத்தைப் பொறுத்து 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. பி.இ. பயர் இன்ஜினியரிங் படிப்புக்கு பிளஸ் 2ல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 மாதத்திலிருந்து 2 ஆண்டு வரையிலான படிப்புகளும் தரப்படுகின்றன.
கல்வித் தகுதியைத் தவிர, சிறப்பான உடற்தகுதியைப் பெற்றிருப்பது மிக முக்கியம். உயரம் குறைந்தது 165 செ.மீ. இருக்க வேண்டும். எடை 50 கிலோவுக்குக் குறையாமலும் மார்பளவு குறைந்தது 81 செ.மீட்டரும் குறைந்தது 5 செ.மீ. விரிவடைவதாகவும் இருக்க வேண்டும்.
துறை எதிர்காலம்: இத்துறையில் படிப்பவருக்கு இது ஒரு வித்தியாசமான வேலையாக அமைவதோடு சவால்கள் நிரம்பியதாகவும் அமைகிறது. அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு தரப்படுகிறது. தீ தடுக்கும் நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் பணி புரியலாம்.
பெட்ரோலிய கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பாலைகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், வேதிப் பொருட்களை தயாரிக்கும் ரசாயன கூடங்கள் போன்றவற்றில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், விமான நிலையங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.