தற்போது மருத்துவமனைகளில் நவீன கருவிகளை திறமையாக உபயோகிக்கவும், நிர்வகிக்கவும் முக்கியமாக தேவைபடுபவர்கள் கிளினிக்கல் இன்ஜினியர்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறை தொழில்நுட்ப முன்னேற்றங்களால் முழுவதுமாக மாறியிருக்கிறது. நோய் அறியும் முறைகள், மருத்துவ கருவிகள், மருந்துகள், தடுப்பூசிகள் மாறியிருக்கின்றன. இந்த வகையில் கிளினிக்கல் இன்ஜினியரிங் படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய கருவிகள் வாங்குவது குறித்தும் மருத்துவமனைக்கு கிளினிக்கல் இன்ஜினியர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். அவற்றை பொருத்துவது சோதிப்பது தொடர்பான பணிகளையும் மேற்கொள்கின்றனர். மருத்துவ சூழலில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்தும் கிளினிக்கல் இன்ஜினியர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
கல்வி நிறுவனங்கள்
எம்.டெக்., கிளினிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இன்ஜினியரிங் பயிற்சிகளுடன் மருத்துவம் தொடர்பான நுட்பங்களும் கற்றுத் தரப்படுகிறது.
* ஐ.ஐ.டி., சென்னை
* கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ், வேலூர்
* ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி, திருவனந்தபுரம் ஆகியவை இந்த எம்.டெக்., படிப்பை வழங்குகின்றன.
அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த இரண்டரை ஆண்டுகால படிப்பில் மாணவர்களுக்கு மூன்று நிறுவனங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான திறன்வாய்ந்த முறையில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதை கிளினிக்கல் இன்ஜினியர்கள் உறுதி செய்கின்றனர். மருத்துவ சூழலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மருத்துவமனை போன்ற சூழலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி மாணவர்களை மருத்து வரும் அவ்வப்போது சந்தித்து பயிற்சி வழங்கி, தேர்வுகள் மூலம் சோதிக்கிறார். இந்த படிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
இந்த படிப்பை நிறைவு செய்ததும், மருத்துவமனை, மருத்துவகருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். சிறப்பான மருத்துவசேவையை வழங்க மருத்துவமனைகள் போட்டி போடுகின்றன. எனவே தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரை கொடுக்க தயாராக இருக்கின்றனர். இந்த துறையில் மேலாண்மை நிர்வாகியாக பணியில் சேர்ந்து ஆராய்ச்சியாளராக கூட உயர முடியும். கிளினிக்கல் இன்ஜினியங் முடித்தவர்களின் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.