வரும் காலங்களில் உலக நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள மிகமுக்கிய தேவை அரசியல் அறிவியல் துறை. இளைஞர்களுக்கு பொறியியல், மருத்துவத் துறைகளில் உள்ள எதிர்காலத்தை போலவே, அரசியல் அறிவியல் துறையிலும் நல்ல எதிர்காலம் உள்ளது. இளம் அரசியல் அறிஞர்கள் அனைத்து நாட்டுக்கும் தற்போது முக்கிய தேவையாக இருக்கிறார்கள். ஒருவர் அடிப்படையில் இருந்து இந்த துறை படிப்புகளை தேர்தெடுத்து படித்தால், சிறந்த அரசியல் அறிஞராக வாய்ப்பு உள்ளது.
அரசியல் அறிவியல், சமூக அறிவியலின் ஒரு உட்பிரிவு. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் செயல்படும் விதம், அதன் சட்டதிட்டங்கள் என நாட்டின் முக்கியமான அனைத்து துறைகளையும் நிர்வகிக்கும் துறையாக அரசியல் அறிவியல் விளங்குகிறது. சர்வதேச உறவுகள், நவீன அரசியல் அமைப்புகள், வெளிநாட்டுக் கொள்கைகள், மேற்கத்திய மற்றும் வளரும் நாடுகளின் ராணுவக் கொள்கைகள், பொது நிர்வாகம், கூட்டாட்சி, அரசியல் பொருளாதாரம், அரசியல் சமூகவியல், அரசியல் உளவியல் போன்ற கல்விப் பிரிவுகளை அரசியல் அறிவியல் கொண்டு விளங்குகிறது.
தகுதி மற்றும் படிப்புகள்
பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவில் பயின்றவர்களும், அரசியல் அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். டிப்ளமோ, பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் இந்த துறையில் காணப்படுகின்றன. பொதுவாக எல்லா பல்கலைக்கழகங்களிலும் அரசியல் அறிவியல் துறை உள்ளது. இதனால் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தை தேர்தெடுத்து படிக்க முடியும். இந்த படிப்புகளுக்கான கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான்.
அரசியல் அறிவியலில் ஆர்வம் இருந்தால் மட்டுமே இந்த துறையில் ஜொலிக்க முடியும். பொதுவான பிரச்னைகளை அலசும் திறமை, அர்பணிப்பு, கடின உழைப்பு, நிர்வாகத் திறமை, தகவல் பரிமாற்றத் திறமை, தலைமைக் குணங்கள், முடிவெடுக்கும் திறன் போன்றவை இந்த துறை மாணவர்களுக்கு முக்கியத் தேவை.
வேலைவாய்ப்புகள்
சட்டம், சமூக நல்லுறவு, தொழிலாளர் நலன், அரசியல் அறிஞர், சமூக நிர்வாகம் போன்றவற்றில் அரசியல் அறிவியல் படித்தவர்களுக்கு பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் அரசுத் போட்டித் தேர்வுகளில் இந்த துறை முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
இதனால் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டின் முக்கியமான அரசுப் பணிகளில் சேர முடியும். மேலும் இளம் அரசியல் அறிஞர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியத் தேவையாக இருக்கிறார்கள். அதனால் இந்த துறையில் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை மறுக்க முடியாது.