அணுக்கருவியல் தத்துவத்தின் அடிப்படையில், அணுக்கரு, அணுவின் பிற கூறுகள், அணுவுக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பு உள்ளிட்டவற்றை படிக்கும் இன்ஜினியரிங் துறை நியூக்ளியர் இன்ஜினியரிங் எனப்படும். இத்துறையானது, ஆய்வு, வளர்ச்சி போன்ற அணுக்கரு ஆற்றலின் அனைத்து பகுதிகளையும் உட்கொண்டிருக்கும். அணுக்கரு ஆற்றலின் மூலமாக பெறப்படும் ஆற்றலானது உலகில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
நியூக்ளியர் இன்ஜினியரிங் துறையானது, அணுக்கரு பிளவு, மருத்துவம், கதிர் இயக்கம், வெப்பவியல்(தெர்மோடைனமிக்ஸ்), அணுஎரிபொருள் டெக்னாலஜி, கதிரியக்க பாதுகாப்பு, அணுஆயுத ஒப்பந்தம், சுற்றுச்சூழலில் கதிரியக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள், கதிரியக்க கழிவுகள் ஆகிய பல பிரிவுகளை உட்கொண்டுள்ளது.
நியூக்ளியர் இன்ஜினியரிங் துறை நிபுணர்கள் நியூக்ளியர் இன்ஜினியர்கள் என அழைக்கப்படுவர். அணுமின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி, அணுக்கரு நீர்மூழ்கிகளை முன்னோக்கி செலுத்துதல் மற்றும் ஸ்பேஸ் பவர் சிஸ்டம் போன்றவற்றை திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் செயல்முறைப் படுத்துதலில் நியூக்ளியர் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. மேலும், அணுஎரிபொருட்களை பாதுகாப்பாக கையகப்படுத்துதல், கதிரியக்க கழிவுகளை வெளியேற்றுதல், மருத்துவத்திற்கு பயன்படும் ரேடியோஆக்டிவ் ஐசோடோப்புகளை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் இவர்கள் ஈடுபடுவார்கள். அணுஆயுதங்கள், மருத்துவம் மற்றும் தொழிற்சாலைக்கும் பயன்படும் கதிரியக்க பொருட்கள் குறித்து இத்துறையில் படிக்கலாம். இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
பயிலும் நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., கான்பூர்
*ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட், மும்பை
*ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிகல் பல்கலைக்கழகம், காக்கிநாடா
*டில்லி பல்கலைக்கழகம், டில்லி
*மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால்
* சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
நியூக்ளியர் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை பெறலாம். இத்துறையில்,மேல்படிப்பை முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.