உலகில் உள்ள கண்ணுக்குத் தெரியாத உயிரிகளைப் பற்றிப் படிப்பதே நுண்ணுயிரியியல் ஆகும். இந்த நுண்ணுயிரிகள் நேரடியாக பார்க்க கண்ணுக்குத் தெரியாதவையாக இருக்கும். வைரஸ், பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவையாகும். இவற்றைப் பற்றி முழுமையான விவரங்களை அளிப்பதே நுண்ணுயிரியல் ஆகும். பி.எஸ்சி., நுண்ணுயிரியல் எனப்படும் இளநிலை பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகளைக் கொண்டதாகும். இதில் படிக்க பிளஸ் 2வில் உயிரியல் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும்.
இந்தியாவில் ஏராளமான கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தும், ஒரு சில பாடப்பிரிவுகளில் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தும் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
மேற்படிப்பு
மேற்கொண்டு மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், எம்.எஸ்சி பயிலலாம். அல்லது டிப்ளமோ இன் மைக்ரோபாயாலஜி, கிளினிக்கல் ரிசர்ச், தடயவியல் அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். இப்படிப்பில் ஆராய்ச்சி வரை சென்று சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில், பெரியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் அரசு கலைக் கல்லூரியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஏராளமான தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு
மிகவும் அரிதான இந்த பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல பணிவாய்ப்புகள் உள்ளன. மருந்தியல், நோய் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.